Sri Lanka Cricket (SLC) வீரர்கள் மற்றும் ஆதரவு பணியாளர்களுக்காக புதிய கடுமையான ஒழுங்கு விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிகள் உடை, மொழி பயன்பாடு, சமூக ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட நடத்தை உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்குகின்றன.
இந்த புதிய வழிகாட்டுதல்கள், மார்ச் 31 அன்று முந்தைய ஒப்பந்தங்கள் முடிவடைந்ததையடுத்து, புதிய பருவத்திற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் தருணத்திலிருந்து அமலுக்கு வரும்.
புதிய விதிகளின்படி, அணியின் சூழலில் அசிங்கமான அல்லது தகாத மொழி பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுப்பயணங்களில் இத்தகைய மொழி பயன்படுத்தும் வீரர்கள் அல்லது பணியாளர்களுக்கு அணியின் மேலாளர் அபராதம் விதிப்பார்.
சமூக ஊடக பயன்பாட்டிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அணியின் ஒற்றுமையை பாதிக்கும் அல்லது நெறிமுறைகளுக்கு முரணான paid promotions மற்றும் விளம்பர நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
உடை தொடர்பான விதிகளும் கடுமையாக உள்ளன. பயிற்சிகள் மற்றும் சுற்றுப்பயணங்களின் போது studs அல்லது earrings அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது. தொழில்முறை தோற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், SLC தலைமையகத்திற்கு shorts மற்றும் slippers அணிந்து வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகளில் மிகவும் கவனத்தை ஈர்த்த அம்சமாக, போட்டி காலங்களில் வீரர்கள் மற்றும் பணியாளர்கள் பாலியல் தொடர்புகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. வீரர்களை honey-trap, blackmail மற்றும் ரகசிய தகவல் கசிவு முயற்சிகளில் இருந்து பாதுகாக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக SLC தெரிவித்துள்ளது.
ஆனால், ஒரு வீரர் தனது சொந்த வாழ்க்கைத் துணையுடன் இருக்கும் உறவு தொழில்முறை கடமைகளுக்கு இடையூறு செய்யாத வரையில் அனுமதிக்கப்படும்.
இந்த புதிய ஒழுங்கு விதிகளின் முக்கிய நோக்கம், நாட்டின் மற்றும் வீரர்களின் மரியாதையை பாதுகாத்து, அவர்கள் முழுமையாக விளையாட்டில் கவனம் செலுத்துவதற்கான சூழலை உருவாக்குவதாக SLC தெரிவித்துள்ளது.