இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான எதிர்வரும் T20I தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின்போது ஏற்பட்ட காயங்களுக்காக இருவரும் தொடர்ந்து மறுவாழ்வு சிகிச்சையில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 16 பேர் கொண்ட அணியில் இருவரும் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டு ஒரு நாளுக்கும் குறைவான நேரத்திலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
T20I மற்றும் ஒருநாள் அணிகளின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் T20I தொடரிலிருந்து விலகியதால் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த சரித் அசலங்கா தற்போது T20I அணியின் தலைவராக பொறுப்பேற்கிறார்.
எனினும், குசல் மெண்டிஸ் ஒருநாள் தொடரிலிருந்து இதுவரை நீக்கப்படவில்லை. ஒருநாள் போட்டிகளிலும் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், துணைத் தலைவரான சரித் அசலங்கா அங்கு அணியை வழிநடத்த வாய்ப்புள்ளது.
வலது தொடைத் தசை காயம் காரணமாக குசல் மெண்டிஸ் ஜூலை 19ஆம் திகதி முதல் போட்டிகளில் விளையாடவில்லை. பினுர பெர்னாண்டோ ஆகஸ்ட் 5ஆம் திகதி முதல் அணியில் இடம்பெறவில்லை. அவரது காயம் முதுகுப் பகுதியில் ஏற்பட்டதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
குசல் மெண்டிஸுக்குப் பதிலாக 24 வயதான முன்னணி வரிசை துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க T20I அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பினுர பெர்னாண்டோவுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
சரித் அசலங்கா சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்னர் T20I அணிக்குத் திரும்பியுள்ளதுடன், தற்போது CPL 2026 தொடரில் St Lucia Kings அணிக்காக விளையாடி வருகிறார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று T20I போட்டிகள் செப்டம்பர் 15, 17 மற்றும் 19ஆம் திகதிகளில் Southampton, Cardiff மற்றும் Manchester ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.
இங்கிலாந்து T20I தொடருக்கான இலங்கை அணி:
Pathum Nissanka, Kamil Mishara (wk), Lahiru Udara (wk), Kamindu Mendis, Charith Asalanka (தலைவர்), Janith Liyanage, Pavan Rathnayake, Dasun Shanaka, Dunith Wellalage, Wanindu Hasaranga, Maheesh Theekshana, Tharindu Rathnayake, Dushmantha Chameera, Eshan Malinga, Nuwan Thushara, Dilshan Madushanka.